சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்த தொண்டர் அணி: டக்ளஸ் தேவானந்தா (Video)
சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று (02.02.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில், எமது கடல் பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாளாந்தம் அறியக் கிடைக்கின்றது.
கடல் பிரதேசங்களில் முறைகேடுகள்
இவற்றை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், உருவாக்கப்படவுள்ள இந்த தொண்டர் அணி செயற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு முன்னாயத்த கூட்டத்தில் அதிகாரிகளினால் இவை சுட்டிக்காட்டப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதற்காக நீதியமைச்சரோடு பேசி சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் போதைப்பொருள் பாவனை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள் போன்ற
பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாயத்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தான்
பணித்திருந்ததாகவும் கூறியதுடன் இந்த செயற்பாடு பேச்சளவில் இருந்துவிடாமல்
செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




