அமைச்சர் நாமலுடன் வெளிநாட்டிற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
அரச செலவினங்களை முடிந்தவரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நிலையில் அமைச்சர் நாமலுடன் இராஜாங்க அமைச்சர்களின் சுற்றுப்பயணம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மேலும் கூறுகையில்,
ஒலிம்பிக் போட்டியில் உத்தியோகப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் ஜப்பானுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி.சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் தொடக்க விழாவில் இலங்கை தேசியக் கொடியைக் காட்டத் தவறியமை தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்படும்.
நிறுவனம் ஒன்றின் நிதியுதவி மூலமே அவர்கள் ஜப்பான் சென்றிருந்தனர். அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயை கூட செலவிடவில்லை.
இருப்பினும் உண்மையை வெளிப்படுத்த விசாரணை அவசியம் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.