ஹெய்ட்டி வன்முறை தாக்குதலில் 110 பேர் படுகொலை
ஹெய்ட்டி(Haiti) நாட்டில், கடந்த வார இறுதியில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் 110 பேர், குழு ஒன்றினால் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாந்திரீகத்தின் மூலம், குற்றக்குழு ஒன்றின் தலைவரது குழந்தைக்கு நோயை ஏற்படுத்தி, அதன் மரணத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படும் வயதானவர்களை, குறிவைத்து, தாக்கியபோதே இந்த 110 பேரும் கொல்லப்படடதாக, தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணைகுழு தெரிவித்துள்ளது.
மதத்தலைவர் ஒருவரின் ஆலோசனை
வார்ஃப் ஜெர்மி என்ற குழுவின் தலைவரான மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவரின் குழந்தை நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே, மதத்தலைவர் ஒருவரின் ஆலோசனையின்படி, இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெலிக்ஸின் நோய்வாய்ப்பட்ட குழந்தை கடந்த சனிக்கிழமை பிற்பகல் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த குழுவின் உறுப்பினர்கள், கடந்த வெள்ளிக்கிழமை குறைந்தது 60 பேரையும், சனிக்கிழமை 50 பேரையும் கத்திகளைப் பயன்படுத்திக் கொலை செய்துள்ளனர்.
டொமினிகன் குடியரசில் நுழைய தடை
வார்ஃப் ஜெர்மி என்ற குழுவுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ், 2022 இல் அண்டை நாடான டொமினிகன் குடியரசில் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் கொலைகள் இடம்பெற்ற இடத்தில், 2018 இலும் குறைந்தது 71 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதேநேரம் கடந்த அக்டோபரிலும் ஹெட்டியின் மற்றுமொரு பகுதியில் சாலை கட்டணங்களை செலுத்தாமை காரணமாக 115 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |