நாட்டின் வன்முறை சம்பவங்கள்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
நாட்டில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை 2022 நவம்பர் 30 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பணிகள் நிறைவடையவில்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடையவிருந்தது.
ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிப்பது தொடர்பான இறுதி அறிக்கையைத் தயாரிக்க ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் தீ வைப்பு, கொள்ளை,
சொத்து சேதம் மற்றும் கொலைகள் உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறை சம்பவங்கள்
குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை, கோட்டாபய
ராஜபக்ச நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.