முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை! ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சர்ச்சை
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால் ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தனர்
மலையக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் அரச அனுசரணையுடன் கூடிய அரசியல் கும்பல்களும் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான "திகன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்து 6 வருடங்கள்: நீதி எங்கே?" என்ற ஆவணப்படத்தின் பின்னர், இது தொடர்பான அறிக்கை அடுத்த சில மாதங்களுக்குள் பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குணதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பின்னர் டிசம்பரில், அந்த பகுதியின் ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.முசாதிக்கின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு அறிக்கை ஜனவரி 2025 இல் பகிரங்கப்படுத்தப்படும் எனக் கூறியது.
கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அந்த ஆணைக்குழுவின் தலைவியாக இருந்த கலாநிதி தீபிகா உடகம தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழு, அப்பகுதி முஸ்லிம்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் கண்டி அஞ்சல் அலுவலக வளாக கேட்போர் கூடத்திற்கு வரவழைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனக் கூறி சாட்சியங்களை பதிவு செய்திருந்தது.
அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கிய கும்பல், அவர்களின் வீடுகள் மற்றும் வணிக இடங்களை எரித்து சொத்துக்களை அழித்த கும்பல் தொடர்பாக எழுத்து, வாய்மொழி மற்றும் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்கள் விசாரணையின் போது ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உட்பட இடைத்தரகர்கள் வலியுறுத்துகின்றனர்.
கலாநிதி தீபிகா உடகம பதவி வகித்த காலப்பகுதியில் மாத்திரம் விசாரணை அறிக்கை "விரைவில்" வெளியிடப்படும் என ஆணைக்குழு ஊடகங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.
பேராசிரியர் உடகமவிற்கு பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க ஆணைக்குழுவின் தலைவராக பதவியேற்றதுடன், தனது இரண்டு வருட பதவிக் காலத்திலும் உரிய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து குறிப்பிட்ட விளக்கத்தை வழங்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி எல்.டி.பி.தெஹிதெனிய தலைமையில் அறிக்கை வெளியிடப்படுமென ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை.
*முஸ்லிம்களுக்கு இல்லாத உரிமைகள் ஏனையவர்களுக்கு* கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஏழு வருடங்களாக வெளியிடப்படாமைக்கு ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர்.
தொகுப்பு பிழைகளை சரிசெய்தல், மும்மொழிகளில் ஒருமுறை வெளியிடும் திட்டம், உரிய அறிக்கையை அவ்வப்போது தலைவர்கள் மற்றும் ஆணையர்கள் மீள்பரிசீலனை செய்தல் ஆகியவை அதில் முதன்மையானவை.
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறு வகையான பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை வழக்கு ஆய்வுகள் மற்றும் கள விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டவை.
ஆனால் அந்த அறிக்கைகள் எதனையும் பாதிக்காத பல தொழிநுட்ப, நிர்வாகச் சிக்கல்கள் மலையக முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மாத்திரம் பாதித்தது என்பது ஆச்சரியமான நிலையாகும்.
2018 மார்ச்சில் பல நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் அரசியல் அனுசரணை பெற்ற குண்டர்கள், மஹசோன் படையணி போன்ற சிங்கள இனவாத அமைப்புக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பது பின்னர் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் முக்கியப் பங்காற்றவில்லை எனவும் நாடாளுமன்றக் குழு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட "இலங்கையில் தேசிய மற்றும் மத சகவாழ்வை உறுதி செய்வதற்காக" என்ற நாடாளுமன்ற விசேட கூட்டறிக்கை அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறது.
“களுத்துறை, காலி, அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மன்னிக்க முடியாத மந்தகதியை கடைப்பிடித்துள்ளதுடன், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் தண்டிக்கத் தவறியுள்ளது.”
அப்போது மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, வன்முறைச் செயல்கள் மற்றும் தாக்குதல் நடத்துபவர்களைப் பாதுகாப்பது பற்றி முன்னரே அறிந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
பின்னர் பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை விசாரிப்பதற்கான ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை மார்ச் 31, 2022 மற்றும் மே 15 க்கு இடையில் நாட்டில் இடம்பெற்ற “தீ வைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்" கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களும், பௌத்த பிக்குகளும் இந்த தாக்குதலுக்கும் டி.ஐ.ஜிக்கும் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக கூறி வந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
திகன தாக்குதல் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படாதது குறித்து ஒரு வருடத்திற்கு முன்னர் திரையிடப்பட்ட ஆவணப்படம் கீழே...
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 04 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
