வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்
வன்முறையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு, நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்று சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் எரிப்பு
சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய நபர்கள் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாடு முழுவதும் நடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாகின. இது சம்பந்தமாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளனர்.
விசாரணைகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடினர்.
சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்துவது சம்பந்தமாக இதன் போது சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.