முஸ்லிம் அமைப்புகள் ஹிசாலினி விடயம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை - விநாயகமூர்த்தி முரளிதரன்
ஹிசாலினி துஷ்பிரயோகத்திற்குள்ளானமை தொடர்பில் பல தமிழ் அமைப்புகள் சிங்கள அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் ஒரு முஸ்லிம் அமைப்பு கூட அதற்காகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செங்கலடியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து அவர்,
ஹிசாலினி என்கின்ற சிறுமியின் கொலைக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஒரு உறுப்பினர் கூட குரல்கொடுக்கவில்லை. இது வேதனையான விடயம். இவர்கள் எவ்வளவு இனத்துவேசத்துடன் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் இதனைச் சேறு பூசி மறைக்கின்ற ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அதன் உண்மைத் தன்மையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அனைவருக்கும் தெரியும். ஹிசாலினி என்கின்ற சிறுமியின் படுகொலை சம்பந்தமான பிரச்சினை. இது மிகவும் பூதாகரமாகப் பேசப்பட்டு வருகின்றது.
உண்மையிலே இலங்கை சட்டத்தின்படி வயது குறைந்தவர்களை வீட்டு வேலைகளில் அல்லது எந்த வேலையிலும் அமர்த்த முடியாது என்பது இலங்கையில் இருக்கின்ற ஒரு கடுமையான சட்டம். அதையும் மீறி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் வீட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வேலைக்கு என அமர்த்தி அந்த சிறுமி மானபங்கப்படுத்தப்பட்டு மரணமடைந்துள்ளார்.
இதற்கான வைத்திய சான்றிதழ்கள் அங்கு வழங்கப்பட்டுள்ளது. பாரிய கொடுமைகள் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதை நாம் உண்மையிலேயே மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகப் பார்க்கின்றோம். இன்று எங்களுடைய தமிழ் சிறுமிகள் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலத்தில் கூட இதை நான் பலமுறை எடுத்துக் கூறி இருக்கின்றேன். எங்களுடைய தமிழ் பெண்கள் வேலை வாய்ப்புகள் தேடி மாற்றுச் சமூகத்திடம் மண்டி இடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நான் பலதடவை எடுத்துக் கூறி இருக்கின்றேன். அதை நாம் எமது கட்சியின் கொள்கையாகக் கூட வைத்திருக்கின்றோம்.
அந்த வகையில் பார்க்கும் போது இதற்கான கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்களுக்கும் நாம் இது தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம்.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால் பல தமிழ் அமைப்புகள், சிங்கள அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் ஒரு முஸ்லிம் அமைப்பு கூட அதற்காகக் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆகவே இவர்கள் எவ்வளவு இனத்துவேசத்துடன் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அது யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் அரசாங்கத்திடமும் அதுசார்ந்த துறைசார் அதிகாரிகளிடமும் நாம் வேண்டுகோளாக விடுக்கின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக நான் தமிழ் மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
இதை பலதரப்பட்ட சமூகப் பிரச்சினையாக நாம் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் பார்க்கும் போது பெண்ணுரிமைகள் மீறப்படுகின்றது. பல தமிழ் செல்வந்தர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும் எங்களுடைய சிறார்களை மாற்றுச் சமூகத்திடம் கையேந்த விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் எமது புலம்பெயர்ந்து வாழ்கின்ற வர்த்தகர்கள் அல்லது செல்வந்தர்களிடம் நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன். இந்த பிரச்சினையுடன் தொடர்புபட்ட அமைச்சர் ஏற்கனவே சஹ்ரானின் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுப் பல விசாரணைகள் தொடர்கிறது.
அதுபோன்ற ஒரு கொடூரமான குடும்பத்தில் இந்த சிறுமி தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றார். அவர் மாத்திரமல்ல பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றது. இன்று பல குற்றப்புலனாய்வுத் துறையினர் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். இதே போன்று பல பெண்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூட வந்திருப்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் உண்மையிலேயே சட்டவாளர்கள்.
சட்டத்தை இயக்குபவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்ற போது அங்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையை உயர்த்துகின்ற போது அந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
அவ்வாறு சட்டத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில். இந்த இலங்கை சட்டத்தையும் மீறி இன்று இவ்வாறு சிறுமிகள், சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.
ஆகவே இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு , எமது கட்சிக்கு இருக்கின்றது. தற்பொழுது எமது மதிப்புக்குரிய அமைச்சர் நிதி அமைச்சராக கோட்டாபய ராஜபக்சவினால் பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். உண்மையிலேயே இதை நான் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் சந்தர்ப்பமாகப் பார்க்கின்றேன்.
நீண்ட நாட்களாக நான் பசில் ராஜபக்சவுடன் பழகியவன் என்ற அடிப்படையில் அவருடைய தூர நோக்கான கொள்கைகள், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு வாய்ந்த அமைச்சின் ஊடாக இந்த இலங்கையில் இருக்கின்ற பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அல்லது தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.
இன்று அடிப்படை விலைவாசி சாதாரண மக்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் என்பவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. சாதாரண குடும்பம் வாழ்க்கையை நடத்துவது என்பது முடியாத விடயமாக உள்ளது. அனைத்து விடயங்களையும் பார்த்தாலும் விலைவாசி என்பது மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மாற்றத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கின்றோம். நானும் பல முயற்சிகளை எடுத்து உள்ளேன். எங்களுக்கும் பல வெளிநாடுகளில் தொடர்புகள் உள்ளது. அங்கு இருக்கின்ற அரசாங்கங்களின் ஊடாக கதைத்தோம்.
எனது அரசாங்கங்களுக்கு நிதி உதவி வழங்குவது விடையம் தொடர்பாக அதே போன்ற பல தொழிலதிபர்களை முதலீடு செய்யும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதற்கான உதவிகளை அரசாங்கம் நாடுகின்ற பொழுது அதையும் நாம் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
இந்த குறுகிய காலகட்டத்தில் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியும். மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாத நிலைமை அரசின் சட்டத்தை மதிக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதனால் எமது வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முடியாத காலம் இருந்தது.
எதிர்வரும் முதலாம் திகதி இந்த சட்டங்கள் நீக்கப்படும் பொழுது நிச்சயமாக நாம் தலைநகருக்குச் சென்று என்னால் இயன்ற பல வேலைத்திட்டங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றோம்.
குறிப்பாக இந்திய அரசாங்கத்துடன் நாம் மிக நெருக்கமாக இருக்கின்றோம். பல உதவிகளை எமது மக்களுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளுடன் பாரிய முதலீடுகளை அரசின் ஊடாக கொண்டு வருவது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம்.
இதை சரியான முறையில் அரசாங்கம் பயன்படுத்துமாக இருந்தால் நாங்களும் பல உதவிகளை வழங்குவோம் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசாங்கம் என்பது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
அரசாங்கத்தை எதிர்ப்பது தொடர்பான தொனியில் போராட்டங்களைப் பார்க்காமல் மக்களிடத்திலே என்ன பிரச்சனை இருக்கின்றது. ஆசிரியர் சமூகத்திற்கு என்ன பிரச்சனை உள்ளது, ஒரு தாதியர் சமூகத்திற்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை அரசும், அரச தலைவர் துறை சார்ந்த தலைவர்களும் புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும்.
உலக நாட்டுடன் பார்க்கும் போது கூடுதலாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நாடாக இலங்கை நாடு மாறியுள்ளது. இதிலே மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றேன். நான் நினைக்கின்றேன் இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகப் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச சில அதிகாரங்களைக் கையில் எடுத்துள்ளார்.
அது தொடர்பாகப் பல வேலைத்திட்டங்களை தற்பொழுது முன்னெடுத்துள்ளார். அந்த வேளையிலே எமது அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர். இதனூடாக பல மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில்தான் நாம் இதை பார்க்க வேண்டுமே தவிர, மக்களை உணர்ந்து மக்களின் குணாம்சங்களை அறியாமல் செயல்பட்டால் இன்னும் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்படும்.
எதிர்க்கட்சி தற்பொழுது பலம் அற்று காணப்படுகின்றது. மக்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று எதிர்க்கட்சியினர் பலதரப்பட்ட பிரச்சினைக்குக் குரல் கொடுத்தாலும் கிசாலினி என்கின்ற சிறுமியின் கொலைக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கவில்லை இது வேதனையான விடயம். அப்போது ரிசானா என்கின்ற ஒரு சிறுமி சவுதியில் தலை வெட்டப்படுகிறது எனப் பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த சிறுமி விடுவிக்கப்பட வேண்டும், தரப்பு தவறுதலாக இடம்பெற்றது என்று. ஆனால் இன்று இந்த கொலைக்கு எதிர்க்கட்சியினர் கூட உண்மையிலே கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களும் அதை சேறு பூசி மறைக்கின்ற ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள், உண்மைத் தன்மையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.