யுத்தத்தில் தாயையும் பின்னர் தந்தையையும் இழந்த சிறுமிகளுக்கு அரச அதிகாரிகளால் நேர்ந்த கதி (Photos)
முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் போது தாயையும், பின்னர் தந்தையையும் இழந்த இரண்டு சிறுமிகள், அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தாயை இழந்த நிலையில் சிறுமிகள் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு அரசாங்கத்தினால் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சிறுமிகளின் தந்தை வேறொரு திருமணம் ஒன்றை செய்து குறித்த வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சிறிய தாயினால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டில் தனது பாட்டியுடன் வசித்து வந்த இரண்டு சிறுமிகளையும் கிராம அலுவலகர் வெளியேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேச செயலாளரிடம், பாதிக்கப்பட்ட சிறுமிகளால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வட மாகாண காணி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து கடந்த வாரம் மாகாண காணித்திணைக்களத்தின் கட்டளைக்கு அமைவாக பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் காணி உத்தியோகத்தர் ஆகியோரால் செல்வபுரம் பொது நோக்கு மண்டபத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த வீட்டை சிறுமிகளுக்கு வழங்க முடியாது என்றும், வீட்டிலிருந்து வெளியேறுமாறும் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகளின் சிறிய தாயாருக்கு கிராம அலுவலர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்து கொண்டு கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகாவில் கிராம அலுவலர் பிரிவில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளதுடன், இவ்வாறு இரண்டு வீடுகளையும் கையகப்படுத்தும் நோக்கில் இரு சிறுமிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளின் துணையுடன் வெளியேற்றியுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







