யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்பு போராட்டம்(Video)
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்றைய தினம் (28.03.2023) இடம்பெற்றுள்ளது.
"ஆளுநர் என்ற எலும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே ", ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கையெழுத்து அடங்கிய மகஜர்
இப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா
கஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார் .
மேலும் ,கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
இதன் போது யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
ஆளுநர் செயலகத்திற்கு சென்ற யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தலைமையிலான குழுவினர் குறித்த மகஜரை கையளித்தனர்.