நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை - திரளும் பொதுமக்கள்
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கொண்டாட்டம் வலையமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, நேற்று(30.05.2026) யாழ்ப்பாணம் - நாக விகாரையின் விகாராதிபதி மீகஹ ஜந்துர ஸ்ரீ விமல ஸ்வாமி தேரர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்
வெசாக் தினக் கொண்டாட்டம்
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரிஜந்த நவரத்ன, 51 ஆவது படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வெசாக் தினத்தில் புத்தரின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வானம் அடைந்த வைகாசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒளியூட்டப்பட்ட அலங்காரங்கள் வெசாக் வலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், பெளத்த பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



மட்டக்களப்பு - மங்களாராமய விகாரை
புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பமாகி நேற்றை தினம்(30) இடம்பெற்றுள்ளன.
விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களையும் பார்வையிடப்பட்டுள்ளன.
அத்துடன், அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

சர்வ மத நல்லிணக்க திட்டங்கள்
இதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைக்கப்பட்ட வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களுடன் பிரம்மாண்டமான வெசாக் அலங்காரக் கூட்டை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எம்.யூ.பிரதீப் களுப்பான, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
இந்த முறை வெசாக் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளில் தாகசாந்தி (பானங்கள் வழங்குதல்) உள்ளிட்ட பல சமூக நல நிகழ்வுகள் சர்வ மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக தகவல் - பவண்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(30.05.2026) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியுள்ளார்.

அத்துடன், பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றதாகவும், புத்த பெருமான் பிறப்பு, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், புத்த பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பெளத்த மக்களால் கருதப்படுவதாகவும் கூறியுள்ளார்.
வெசாக் தினக் கொண்டாட்டத்தில், வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட 51 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - தீபன்