வேலன் சுவாமிகளை கைது செய்தமை கொடுஞ்செயல் - சீமான் கண்டம்
இலங்கை அரசின் இனவெறி செயற்பாடுகளுக்கு எதிராக போராடிய இலங்கை மத தலைவர் வேலன் சுவாமிகளை கைது செய்தது அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இடம்பெற்ற தமிழர்களின் தேசிய திருவிழாவான தை திருநாளில் இலங்கை அதிபர் கலந்து கொள்வதற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நிகழ்த்திய தவத்திரு வேலன் சுவாமிகளை இலங்கை பொலிஸார் கைது செய்தது வன்மையான கண்டனத்துக்குரியது.
மேலும், இலங்கை அரசின் இனவெறி செயல்படுகளுக்கு எதிராக போராடும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது இலங்கையின் முப்படையினர் அடக்குமுறைகளை பிரயோகித்து வழக்குகள், கைதுகள் மூலம் ஒடுக்குவதும், அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என இலங்கை இனவாத அரசால் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் எந்த அரசு ஆட்சி அமைத்தாலும், யார் ஆட்சித் தலைவராக வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் நிறுத்தப்படாது என்பதை வேலன் சுவாமிகளின் கைது உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளதுடன், ஒரே நாட்டிற்குள் தமிழர்களை ஒன்றிணைத்து வாழ்வது என்பது சாத்தியமற்றது என இப்போதாவது உலக நாடுகளும், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என சீமான் தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.