கொழும்பில் வாகன விற்பனை போர்வையில் கோடிக்கணக்கான பணமோசடி - சிக்கிய தொழிலதிபர்
கொழும்பு - ஹோமாகம, கொடகம பகுதியில் வாகனங்களை விற்பனை செய்வதாகக்கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகன விற்பனை நிலைய உரிமையாளரை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமகம பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டு
சந்தேகநபர் வாகனங்களை விற்பனை செய்வதாகக்கூறி வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஏமாற்றி சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.
பணமோசடியில் ஏமாற்றப்பட்ட சுமார் 15 பேர் மீகொடா பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
ஹோமாகம, கொடகம பகுதியில் வாகன விற்பனை நிலையம் நடத்தி வந்த சமர பவந்தா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மீகொட பொலிஸ் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.