கொழும்புக்கான மரக்கறி விநியோகம் இடைநிறுத்தம்
மலையக பகுதிகளில் விளைந்த மரக்கறிகள் இன்னும் கொழும்பு மொத்த சந்தைக்கு வரவில்லை என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி வகைகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர நெருக்கடி காரணமாக மலையக விவசாயிகள் நேற்று முதல் தம்புள்ளை, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட பொருளாதார நிலையங்களுக்குக் கையிருப்பில் உள்ள மரக்கறிகளை வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தினர்.
இதன் காரணமாக பேலியகொட மெனிங் சந்தை மற்றும் பல பொருளாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் மரக்கறிகளின் அளவு, குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் மரக்கறி விநியோகம் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக காணப்படுகின்றது.
அதேபோல கட்டுகஸ்தோட்டை - மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறி வகைகளின் விலைகள் மிக அதிகமாக காணப்படுகின்றது.
மேலும், கொழும்பு - கோட்டையை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் விலை மிக அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
