வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரக உடைப்பு விவகாரம்: பின்னணியில் ஐ.தே.க
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிரக உடைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சம்மந்தம் உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (03.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.
இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
மதங்களுக்கு இடையில் பிரச்சினை
இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் இந்த அமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாகையை காட்சிப்படுத்தியுள்ளது.
இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில், “இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துகிறது. தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.
அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்களால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பௌத்த மயமாக்கல்
இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை பின்புலமாக கொண்டு மிக விரைவாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தான் இது தீவிரமாக நடைபெறுகிறது. பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது.
வவுனியாவில் வெடிவைத்தகல்லை ஆக்கிரமித்து கச்சல்சமனங்குளம் என்ற பெயரில் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை கட்டப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பௌத்தமயமாக்கலை செய்ய இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வவுனியாவில் பல நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அமைப்பின் ஊடக ஐக்கிய தேசிய கட்சி பௌத்த மயமாக்கலை செய்ய முயல்கிறது.” என எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |