வவுனியா தோணிக்கல் பகுதியில் அரசாங்கத்தின் பணம் கிடைக்காமையால் குழப்பநிலை
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தைப் பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக அங்கு குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் - சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவைப் பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரைக் கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவைப் பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் குறித்த பணத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட தரப்பினர் பலரும் கடந்த இரு தினங்களாக ஒன்று கூடிய போதும் அவர்களுக்கு முழுமையாகப் பணம் வழங்காது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (12.04) சென்ற பலரை இன்று (13.04) வருமாறு உத்தியோகத்தர்கள் அறிவித்த போதும் இன்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவை வழங்கி விட்டு ஏனையவர்களை 15 ஆம் திகதி வருமாறு தெரிவித்திருந்தனர்.
இதனால் அங்கு புதுவருட கொண்டாட்டத்திற்காகப் பணம் பெற வந்த சிலர் தமக்கு புது வருடத்திற்குத்தான் அரசாங்கம் குறித்த பணத்தை வழங்குகின்றது. ஆனால் நீங்கள் அதனைத் தராமல் 15 ஆம் திகதி தருவது என்ன நியாயம். எம்மை வேண்டும் என்றே அலைக்கழிக்கிறீர்கள். வேறு பகுதிகளில் பல கிராம அலுவலர்களும், அரச உத்தியோகத்தர்களும் இரவிரவாக நின்று கொடுப்பனவுகளை வழங்குகின்ற போதும் இங்கு மட்டும் நீங்கள் பணத்தை உரிய காலத்தில் வழங்காது இழுத்தடிப்பதாகத் தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாரை அழைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், பொலிஸ் பாதுகாப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்கப்பட்டு ஏனையவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, தாம் புதுவருடத்திற்கு மக்களுக்காக அரசாங்கம் தந்த பணத்தைத் தருமாறு கேட்ட நிலையில் அமைச்சர், ஜனாதிபதி, எமது மாவட்ட திலீபன் எம்.பி யாரிடம் என்றாலும் சொல்லுங்கள்.இப்படி தான் செய்ய முடியும் எனத் தெரிவித்து எமக்குப் புதுவருடத்திற்குப் பணத்தைத் தராது கிராம அலுவலர் இழுத்தடிப்பதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிராம அலுவலரைத் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போதும், மக்கள் முழுமையாகச் செல்வதற்கு முன்னரே கிராம அலுவலர் 4.30 மணியளவில் அங்கிருந்து சென்றுவிட்டார்.