வவுனியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது - திலீபன் எம்.பி குற்றச்சாட்டு
வன்னியில் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரிடம் வன்னியின் சுகாதாரத்துறை தொடர்பில் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபோல் தாதியர் பற்றாக்குறையும் உள்ளது. அதனை விரைவாக நிரப்பினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
வன்னி மாவட்டத்தில் சில வைத்தியர்கள் காலை 11 மணிக்கு வைத்தியசாலைக்குச் சென்று இரண்டு மணித்தியாலங்களில் திரும்பிச் செல்கின்ற நிலையும் உள்ளது.
இது தொடர்பில் குழு ஒன்றை அனுப்பி திடீரென அவ்வைத்தியசாலைகளுக்குச் சென்று ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும்.
எமது கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு 251 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டடங்கள், திணைக்களம் மற்றும் மாகாண கட்டிடங்கள், திணைக்களம் என்பன இதுவரை எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த அரசாங்கம் பணங்களை திருப்பி அனுப்பியதைப் போன்று அல்லாது எமது அரசாங்கத்தில் இந்த வேலைத்திட்டத்தை தாங்கள் முடித்து வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் குறித்த விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.