வவுனியா - சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கோவிட்
வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் மேலும் 22 பேர் உட்பட 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சகாயமாதாபுரம் பகுதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.
அதில், தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு இலக்கானவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, சனத்தொகை குறைந்த குறித்த சகாயமாதாபுரம் சிறிய கிராமத்தில் இதுவரை 53 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் கோவிட் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிராமத்தின் பிரதான வீதிகள், உள்
வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி
பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.