வவுனியா மாநகரசபையின் குழுநிலை விவாதம்!ஊடகங்களுக்கு மட்டுப்பாடு
வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று (14)இடம்பெற்ற நிலைநில் அதனை செய்திசேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு நேற்று காலை இடம்பெற்றிருந்தது.
கடந்த அமர்வில் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆதனவரியினை குறைக்குமாறு தேசியமக்கள் சக்தி மற்றும் ஏனைய சில உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இந்நிலையில் அதுதொடர்பாக ஆராய்வதற்கு விசேட அமர்வு ஒன்று நடாத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
குழுநிலை விவாதம்
அதற்கமைய நேற்று அமர்வு இடம்பெற்ற போது இந்த விடயத்தை குழுநிலை விவாதமாக நடாத்தவேண்டும் என சபை உறுப்பினர் சு.விஜயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.அதற்கமைய குழுநிலை விவாதமாக நடாத்துவதற்கு சபையால் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது குழுநிலை விவாதத்தை செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் அந்த விவாதம் முடியும் வரை ஊடகவியலாளர்கள் வெளியில் செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. குழு நிலை விவாதம் முடிவடைந்த பின்னர் ஊடகங்கள் செய்திசேகரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை இனிவரும் காலங்களில் வவுனியா மாநகரசபையின் அமர்வில் கலந்துகொள்வதற்கு ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவேண்டும் என சபை உறுப்பினர் பிரேமதாஸ் முன்மொழிந்திருந்தார்.சக உறுப்பினர் பர்ஸ்சான் அதனை வழிமொழிந்தார்.
ஊடகங்களுக்கு மட்டுப்பாடு
இதனையடுத்து இனிவரும் காலங்களில் ஊடகஅமைச்சில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபை அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சபை தீர்மானித்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு தனியான பிரத்தியேக இடம் வழங்கவேண்டும். இவ்வாறு உள்ளே எல்லாம் வரமுடியாது. ஆனால் நாங்கள் இடப்பற்றாக்குறையால் விட்டுள்ளோம்.
எனவே ஊடகவியலாளர்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபை அமர்வுகளை இனிவரும் காலங்களில் நேரலையில் ஒளிபரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




