வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 1626 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன
வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணித்தியாலங்களில் 1626 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவின் பல்வேறு கிராம அலுவலர் பிரிவுகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குச் சீனாவின் சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் மற்றும் உக்குளாங்குளம் கிராமங்களை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் வைத்து தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அரங்கன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம், பண்டாரிக்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் வாகீசன் ஆகியோரது தலைமையில் கிராம அலுவலர் ராகுலின் ஒழுங்குபடுத்தலில் நேற்று காலை முதல் 7 மணித்தியாலத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 584 பேருக்கும், 30 - 60 வயதிற்குட்பட்ட 476 பேருக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்று காலை முதல் 5 மணித்தியாலத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 78 பேருக்கும், 30 - 60 வயதிற்கு இடைப்பட்ட 488 பேருக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதன்படி 12 மணித்தியாலத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 662 பேருக்கும், 30 - 60 வயதிற்கு இடைப்பட்ட 964 பேருக்கும் என 1626 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
குறித்த கிராம அலுவலர் பிரிவில் கோவிட் தடுப்பூசியைத் தவற விட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு குழுவினர், கோவிட் - 19 தடுப்பு குழுவினர், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்களிப்பின் மூலமே அதிகளவிலான மக்கள் விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று ஏனைய கிராமங்களுக்கு முன் மாதிரியாகச் செயற்பட்டுள்ளதாகத் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த செயற்பாட்டை முன்னெடுக்க உதவிய பாடசாலை சமூகத்தினர், மாவட்ட செயலகத்தினர், பிரதேச செயலகத்தினர், பட்டதாரி பயிலுனர்கள், இராணுவத்தினர், அப் பகுதி பொது அமைப்புக்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.