வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக சிவாஜிலிங்கம்
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார்.
தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார்.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.
ஏற்கனவே தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.

