500 ரூபா வரையில் உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி! ரணில் காலத்தின் பின்னர் அநுர ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம்
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றபோது கறுப்புச் சந்தையில், அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக காணப்பட்டது. ரணிலின் ஆட்சிக்காலத்தில் டொலரின் பெறுமதி 290 ரூபா வரை சரிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், 290 ரூபாவில் இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போதைய அரசாங்கத்தில் 320 ரூபாவாக உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் நாட்டின் கடன் சுமை 37 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(15.04.2026) காலி, உழுவிட்டிகே பகுதியில் அமைந்துள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
சிங்கள - தமிழ் புத்தாண்டு கலாசார விழுமியங்களை மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்தாவது நிறைவேற்றியுள்ளமை பாராட்டுக்குரியது. அரசாங்கம் கலாசார மற்றும் மத விவகாரங்களில் அக்கறையின்றி செயற்பட்டாலும், மக்கள் தங்களின் மரபுகளை எவ்வித அழுத்தங்களுக்கு மத்தியிலும் பாதுகாப்பார்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வாகனப் போக்குவரத்துகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 94 டொலர் வரை குறைந்துள்ள போதிலும், விலைச்சூத்திரத்தின் பலனை மக்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வரவில்லை. யுத்தம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது.
மேலும், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நாட்டை மீட்டெடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் போன்ற காத்திரமான சட்டங்கள் தற்போது முழுமையாக மீறப்பட்டுள்ளன.
இந்தச் சட்டங்களின் கீழ் இனி நாட்டை மாற்றியமைக்க முடியாது என்பதால், கடந்த 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியை விடவும் பாரியதொரு புதிய யுக மாற்றம் இலங்கைக்கு அவசியமாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலம்
பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். இதேவேளை, கடந்த 1977- இல் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே இன்று மக்கள் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் நவீன ஊடக வசதிகளை அனுபவித்து வருகிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது டொலர் ஒன்றின் மதிப்பு கறுப்புச் சந்தையில் 450 - 500 ரூபாவாகக் காணப்பட்டது.

அவர் அதனை 290 ரூபா வரை குறைத்து நாட்டை ஒப்படைத்தார். ஆனால் இன்று டொலரின் மதிப்பு மீண்டும் 320 ரூபாவை நெருங்கியுள்ளது. டொலரின் மதிப்பு ஒரு ரூபாவால் அதிகரிக்கும் போது நாட்டின் கடன் சுமை 37 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கிறது.
இவ்வாறு கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றால் நாடு மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறும் அபாயம் உள்ளது. அத்துடன், 50 வருட அரசியல் அனுபவமும் சர்வதேசத் தொடர்புகளும் கொண்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri