தடுப்பூசி தொடர்பில் இலங்கை மருத்துவர் சங்கம் விடுத்துள்ள முக்கிய தகவல்
கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வது மிகவும் அவசியமானது என இலங்கை மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார ஸ்தானம் இதுவரையில் ஏழு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ டொக்டர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி அளிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைத்து தடுப்பூசிகளினாலும் 65 வீதத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு கிடைப்பதாகவும், தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும் 90 வீதமான பாதுகாப்பு கிடைக்கும் எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நேரிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் சந்தர்ப்பத்திலேயே கிடைக்கும் ஏதேனும் ஓர் வகை தடுப்பூசியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், வைரஸ் தொற்றுக்களிலிருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்த் தொற்று சிறுவர்களுக்கு தொற்றாது என்று கூற முடியாது எனவும், சிறுவர்களுக்கும் நோய்த் தொற்று தாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.