மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 65,024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 65,024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 79 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மூன்றாவது அலையில் 6356 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 79 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், செங்கலடி பகுதிகளில் 14 பேரும், களுவாஞ்சிகுடியில் 11 பேரும், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் தலா 6 பேரும், பட்டிப்பளை, ஆரையம்பதி போன்ற பகுதிகளில் தலா மூன்று பேரும், கிரான், ஓட்டமாவடி பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7339 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 பேர் மரணமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாவது அலையில் இதுவரையில் 6356 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 91 பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 3387 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் கடந்த வாரம் 593 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில இருந்து இன்று முதல் விடுவிக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாமாங்கம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50,000 கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. அதில் 370,024 தடுப்புசிகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தடுப்பூசியானது 14,981 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,000 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 7000 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.