ஜனாதிபதியின் பரிந்துரையின் காரணமாகவா சீன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தது?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமையவே உலக சுகாதார ஸ்தாபனம் சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
நாட்டின் கோவிட் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்நாயக்க இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் சீன உற்பத்தியான சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக சுகாதார ஸ்தாபன முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சீன தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி கிடைக்கப் பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அன்றைய தினமே இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சினோபார்ம் தடுப்பூசி இலங்கையில் ஏற்றும் நடவடிக்கை உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கி மறுதினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றான சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் நீண்ட நாட்களாக அனுமதி வழங்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.