சிங்கள மக்களை பகடைக் காயாக பயன்படுத்தும் கம்மன்பில: சபா குகதாஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ராஜபக்ச முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய வாக்கு வங்கியை இனவாத ரீதியாக தக்க வைக்க அப்பாவிச் சிங்கள மக்களை பகடைக் காயாக பயன்படுத்த தமிழர்கள் தொடர்பாக இனவாதக் கருத்துக்களை கைக்கி வருகின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
இன்றைய தினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இனவாதக் கருத்துக்கள்
அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, அண்மைய நாட்களில் தமிழர்கள் சமஷ்டி கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்றார், பின்னர் குருந்தூர் மலையை காப்பாற்ற சிங்கள மக்களை பொங்கி எழுமாறு அறை கூவினார்.
13ஆம் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் நாடு பிளவடையும் என்றார்.
தற்போது கொழும்பில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை சிங்கள மக்களை கொண்டு விரட்டப் போவதாக அறிக்கை விட்டுள்ளார்.
பகடைக் காயாக
தமிழர்களை பயன்படுத்தி கடந்த காலத்தில் சில இனவாதிகள் வாக்குகளை பெற்றது போல, தானும் பெற்று விடலாம் என்ற நப்பாசையில் அப்பாவிச் சிங்கள மக்களை தவறாக வழி நடத்த முனைகிறார் கம்மன்பில.
கம்மன்பில கூறியவற்றுள் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13ஆம் திருத்தத்தை முடிந்தால் நீக்கி காட்ட முடியுமா?
வெறும் வாய்ச்சவட்டை விட்டு செயலில் காட்டுங்கள். குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்கு வாருங்கள் என ஏமாற்றி அப்பாவிச் சிங்கள மக்களை பேருந்துகளில் ஏற்றி வந்ததை தமிழர்கள் அறிய மாட்டார்கள் என நினைக்கிறார்.
கடந்தகால இனவாதத்தால் நாடு இந்த சீரழிவு நிலைக்கு வந்தது என்பதை அப்பாவிச் சிங்கள மக்கள் உணராவிட்டால் உதய கம்மன்பில போன்றோரின் இனவாதப் பிரிப்பு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
