கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: குண்டு வீச்சு விமானங்களுடன் அதிகரிக்கும் போர் பயிற்சி
வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் தங்கள் கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருப்பதாக ஜப்பான் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
அத்துடன் இந்த ஏவுகணை ஹொக்கைடோ-வின்(Hokkaido) மேற்கே 210 கிமீ தொலைவில் உள்ள கடல் பகுதியில் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவிற்கு எதிரான வலுவான எதிர் நடவடிக்கை
வட கொரியாவிற்கு எதிரான வலுவான எதிர் நடவடிக்கைகளுக்கு தென் கொரியா உத்தரவிட்டு இருந்த நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதல் அரங்கேறியது, இதற்கு அமெரிக்காவும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தது.
வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியதை தொடர்ந்து தற்போது அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சியை சனிக்கிழமை நடத்தியதாக கூட்டுப் பணியாளர்களின் தலைவர்களை (JCS) மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ராணுவ பயிற்சி மூலம் மீண்டும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ திறன் விவரிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரிய தீபகற்பத்தை பாதுகாப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட தடுப்பு வழங்குவதில் அமெரிக்காவின் ஈடுபாடு வெளிகாட்டப்பட்டுள்ளது எனவும் இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க B-1B Lancer மூலோபாய குண்டுவீச்சு போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.