ஈரானியர்களுக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றினை விட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேவைகள் முடக்கம்
மேலும், அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு ஆகியவற்றால் ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. இதனால் ஈரானில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது. இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் அரசு எச்சரிக்கை
இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள்.
அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார். மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும்.
வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தயார்
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.
மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் ட்ரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.