அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு பணவீக்கம்! - விலைவாசிகளும் சடுதியாக உயர்வு
அண்மைய கால உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவின் பண வீக்கம் கடந்த ஒரு மாத காலத்தில் உயர்வை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இவ்வாறு பண வீக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்படி, பணவீக்கத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு அளவீடு பெப்ரவரியில் 7.9 வீதமாக உயர்ந்தது, இது ஆண்டின் தொடக்கத்தில் 7.5 வீதமாக இருந்தது. எவ்வாறாயினும், 1982க்கு பின்னர் மிக உயர்ந்த விகிதமாக இது கருதப்படுகின்றது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் முடிவெடுத்துள்ள நிலையில், உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த வாரம் இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இந்த விவகாரம் ஒரு பாரிய தலைவலியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலை உயர்வை குறைக்க தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே, உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை அமெரிக்கா வற்புறுத்த முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதேவேளை, உணவு பொருட்களின் விலைகளும் ஏறுமுகத்தில் உள்ளன. கடந்த 12 மாதங்களில் 8.6 வீதம் விலை உயர்ந்துள்ளது, இது ஏப்ரல் 1981க்கு பிறகு ஆண்டு விகிதத்தின் அதிகபட்ச விகிதத்தைக் குறிக்கிறது.
இந்நிலையில், அடுத்த வாரம், ஃபெடரல் ரிசர்வ் - அமெரிக்காவின் மத்திய வங்கி - பணவீக்கம் தொடர்பில் கூடி ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.