யாழ்ப்பாணம் மேயர் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை!
யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
Arrest of Jaffna Mayor is worrisome. Having strong rule of law (with judicial safeguards) is a better way to fight terrorism while protecting everyone’s basic freedom.
— Ambassador Teplitz (@USAmbSLM) April 9, 2021
இதேவேளை, யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்றிரவு யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யபட்டார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மேயரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் யாழ். மேயர் கைது செய்யப்பட்டமைக்கு கவலை வெளியிட்டுள்ளார்.