நெருக்கடிக்குள்ளான பொருளாதாரம்! - இலங்கைக்கு அமெரிக்கா கூறும் அறிவுரை
இலங்கையின் எரிசக்தி துறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போர்ட்ரஸ் எரிசக்தி நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட முதலீடு, இலங்கைக்கு திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பம் உட்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஒரு புதிய திரவ இயற்கை எரிவாயுவை பெறுதல், சேமித்தல் மற்றும் மறுசீரமைப்பு முனையக் கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக முன்னதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போர்ட்ரெஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
கெராவலபிட்டி மின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த முனையம், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு வழங்கும் பணியில் ஈடுபடும்.
இது தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்கா தூதர், இது ஒரு தனியார் முதலீடு என்றும், சொந்த பணத்தை இந்த நிறுவனம் முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
நியாயமான, தெளிவான, நிலையான கட்டமைப்பின் அடிப்படையில் ஊழல் நடைமுறைகளைச் கொண்ட வணிக ஒப்பந்தங்களை அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அமெரிக்க தூதுவர் கூறினார்.
நெருக்கடிக்குள்ளான பொருளாதாரத்தை புதுப்பிக்க இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்க தூதர் வலியுறுத்தினார்.
இதனை விடுத்து, வேறு எந்த மாற்று முறையும் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான அடித்தள தேவைகளை வழங்காது என்று அவர் கூறினார்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஏற்பாடு சிறந்த தீர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.