பஷில் ராஜபக்ஷவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி அனுப்பியுள்ள அவசர கடிதம்
இலங்கை சந்தித்துள்ள டொலர் பரிமாற்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கான சேவைகளை இடைநிறுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
குவைத் எயார் லைன்ஸ் ஏற்கனவே கடந்த வாரம் முதல் சேவைகளை நிறுத்தியுள்ளது.
இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவினை மிக மோசமாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு (Basil Rajapaksa) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதந்திரத்திற்குப் பின்னர் நமது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் படுமோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அம்மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையில் தங்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டம் வரவேற்கப்படவேண்டியதே. இருப்பினும் இதனை எவ்வளவு காலத்திற்கு செய்ய முடியும்? இதனை நிரந்தர தீர்வாக கொள்ள முடியுமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.
இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு ஆண்டொன்றுக்கு 225 பில்லியன் ரூபா மேலதிகமாக தேவைப்படும் எனத் தெரிய வருகிறது. அரசாங்கத்தின் உண்மையான வருமானம் அதிகரிக்கப்படாமல் புதிதாக அச்சடிக்கப்படும் நாணயத் தாள்களைக் கொண்டு இது மேற்கொள்ளப்படுமானால் பாரிய அளவில் அது இன்னும் பணவீக்கத்தினையே அதிகரிக்கும்.
இது வரை ஒற்றை இலக்கமாக இருந்த பணவீக்கம் தற்போது இரட்டை இலக்கமாக மாறியுள்ள நிலையில், நிலவும் பொருளாதார சிக்கலினை இன்னும் மோசமான நிலைக்கே அது கொண்டு செல்லும்.
எனவேதான் தற்போது தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணங்களை சரியாக அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை அமுல் படுத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மக்களையும் நாட்டையும் மீட்டெடுக்க முடியும். அந்த வகையில் பின்வரும் கேள்விகள் முக்கியமானவை.
01. தற்போது சந்தையில் காணப்படும் நுகர்வுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது?
02. கடந்த இரண்டு வருடங்களில் புதிதாக அச்சடிக்கப்பட்ட நாணயத் தொகையும் அது ஏற்படுத்திய பணவீக்கத்தின் தாக்கமும் என்ன?
03. அவசரமாக மேற்கொள்ளப்பட்ட உரக் கட்டுப்பாடானது, தற்போது நிலவும் உணவுத் தட்டுப்பாட்டில் என்ன பங்கு வகிக்கிறது?
04. அந்நிய செலவாணி பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது?
05. தற்போது திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்களாக மாறியுள்ள பாரிய தொகைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் என்ன?
06. தேசிய உற்பத்தியை அதிகரிப்பதில் அந்த ஒவ்வொரு வேலைத் திட்டங்களும் செய்த பங்களிப்புக்கள் என்ன?
07. வெளிநாட்டு அந்நியச் செலவாணி வரவுகளைப் பாதித்த அம்சங்கள் எவை? அவற்றைச் சரி செய்வது எப்படி?
08. மேலும் கடன் சுமையை அதிகரிக்காமல் அந்நிய செலவாணி கையிருப்பை எப்படிக் கூட்டுவது?
இது போன்ற காத்திரமான சுய விசாரணைக் கேள்விகளுக்கு அரசாங்கம் தன்னை உட்படுத்த வேண்டும். அதிலிருந்து விடை காண முயற்சிக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். அந்நிய செலவாணியினை நம் நாட்டுக்கு கொண்டு வரும் முக்கிய துறையாக சுற்றுலாத் துறை இருக்கிறது.
கடந்த 2019 இல் 19 இலட்சம் பேர் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டுக்கு வந்துள்ளனர். அதன் மூலம் 3.5 பில்லியன் டொலர் நமக்குக் கிடைத்துள்ளது. 2020 இல் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்கு வரத்துக்கள் தடைபட்டன. எல்லா இடங்களிலும் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமானது.
இருந்தாலும் 2021 ஆரம்பம் முதல் சுற்றுலாத் துறை வழமைக்கு திரும்பத் தொடங்கியது. பல நாடுகளும் இதனை பயன்படுத்திக் கொண்டன. நமக்கு அருகில் உள்ள மாலைதீவு இதற்கு நல்ல உதாரணமாகும். 2021 இல் மொத்தமாக அந்த நாட்டுக்கு 13 இலட்சம் பயணிகள் சென்றுள்ளனர்.
நமது நாடும் இதனைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. 2 இலட்சத்திற்கும் குறைவான பயணிகளை மாத்திரமே எம்மால் கவர முடிந்தது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 3.1 பில்லியன் டொலர்களை நாம் இழந்துள்ளோம்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகமான பயணிகள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு நம்பிக்கை தரும் விடயமாகும். இதன் தொடரில் ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சம் அளவில் உல்லாசப்பயணிகளை எதிர் பார்ப்பதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு நடந்தால் நமது அந்நிய செலவாணி பிரச்சினையைத் தீர்ப்பதில் கனிசமான பங்கினை இது வகிக்கும். இது நம்பிக்கையளிக்கும் நிலைமையாக இருந்தாலும் கூட சுற்றுலாத் துறையை கடுமையாக பாதித்து முடக்கக்கூடிய சில விடயங்களும் நடப்பதானது, மிகவும் கவலைக்குரியதாகும்.
உதாரணமாக சர்வதேச விமான சேவைகள் பலவும் இலங்கைக்கான சேவையை இடை நிறுத்தப் போவதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. குவைத் விமான சேவை தமது சேவைகளை ஏற்கனவே இடைநிறுத்திவிட்டது. தமது உள்நாட்டு முகவர்கள் ஊடாக டிக்கட் விற்பனை வருமானத்தை நீண்ட நாட்களாக பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதே இதற்கான காரணமென தெரிய வருகிறது.
இலங்கை ரூபாவில் கிடைக்கும் டிக்கட் விற்பனை வருமானத்தை அந்தந்த வெளிநாடுகளுக்கு அனுப்புவற்குரிய டொலர் பரிமாற்றம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கடுமையான டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும் இருக்கின்ற கையிருப்பை முன்னுரிமை அடிப்படையில் எப்படிப் பயன்படுத்துவது என்ற திட்டம் நிதியமைச்சிடம் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் விமான சேவைக்கான கொடுக்கல் வாங்கல்கள் மிக முக்கியமானதாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிதி விடயம் ஏன் நிதியமைச்சினால் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை என்பது பெரும் கவலையளிக்கிறது.
எனவே நிதியமைச்சர் என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறும், சுற்றுலாத் துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு மிக அடிப்படைத் தேவையான சர்வதேச விமான சேவைகளை தக்கவைத்துக் கொள்வதற்கான உடனடித் தீர்வுகளை வழங்குமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நாம் எதிர் கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துவீர்கள் எனவும் எதிர் பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.