வாழைச்சேனையில் கோவிட் அதிகரிப்பால் அவசர கலந்துரையாடல்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் ,மக்களை விழிப்பூட்டும் வகையில் வழிபாட்டுத் தலங்கள், பிரதேச சபை, பொலிஸார் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்குத் தனி நபர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அத்தோடு இம்மாதம் 20ஆம் திகதி வரை மத வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள் நடாத்துவதற்குத் தடை, வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்கள், திணைக்களங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் வருகை தர வேண்டும் அதனை மீறும் பட்சத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை மீறி பிரத்தியேக வகுப்புகள், பொது இடங்களில் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் நடைபெறும் பட்சத்தில் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்து தனிமைப்படுத்தப்பட உள்ளதுடன், அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை கருதி ஒரு குடும்பத்தில் இருவர் மாத்திரமே சுகாதார முறையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி செல்ல வேண்டுமென்றும், தேவையற்ற விதமாக வெளியில் செல்லாது பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், பிரதேசத்தில் கோவிட் வைரஸ் அதிகரிக்காத வகையில் அனைவரும் செயற்படுமாறும், இதற்கு அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப்
சஞ்ஜீவ், வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், உதவி
பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக
முகாமையாளர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், செயலக உத்தியோகத்தர்கள்,
வாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட
பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.