மலையக அபிவிருத்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து (Photos)
தேசிய மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் உதவியோடு மலையக மக்களின் நிலைப் பேண்தகு அபிவிருத்தி திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
குறித்த அபிவிருத்தி திட்டங்கள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் எண்ணகருவுக்கமையவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்திற்கும், சர்வதேச நிறுவனமான 'வேர்ல்ட் விஷன்' நிறுவனத்திற்கும் இடையே அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வேர்ல்ட் விஷன் நிறுவனம்
இதன்போது பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளதாவது, எமது நாடு எதிர்நோக்கி உள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழப் பல நாட்டுத் தூதரகங்களும் சர்வதேச ஸ்தாபனங்களும் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மலையகம் எங்கும் தனது சேவைகளைத் தொடர சர்வதேச நிறுவனமான வேர்ல்ட் விஷன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
முன்னெடுக்கவுள்ள வேலை திட்டங்கள்
உணவுத் தட்டுப்பாடு, சுத்தமான குடிநீர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை மையப்படுத்திப் பல வேலைத் திட்டங்கள் நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பல தேசிய மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களுடன் உதவியுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக பல வேலை திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம் என பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சர்வதேச நிறுவனமான வேர்ல்ட்
விஷன் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி தனம் சேனாதிராஜா மற்றும்
இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






