கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்
கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (03.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிபுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கம்
அந்தவகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.

அந்தகூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்ற போது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது, இதுவே நடைமுறை என கூறினார்.வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச் சென்றேன்.
கிபுல் ஓயா திட்டம்
அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறி விட்டேன்.

இது ஒரு அநீதியான பழிவாங்கும் செயற்பாடு. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எமக்கு இந்த கதிரை முக்கியம் அல்ல.
கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவே எனக்கான இருப்பிடம் மறுக்கப்பட்டதற்கான காரணமாக உள்ளது.
என்ன நடந்தாலும் கிபுல் ஒயாத்திட்டம் நிறுத்தப்படும் வரை எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.