இலங்கை தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்! - ஐ.நா ஆணையாளருக்கு அரசாங்கம் பதில்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உரிய வகையில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக பதிலளிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் இரண்டு வருடங்கள் தடுத்து வைத்தல் மற்றும் பொலிஸ் பாதுகாப்பிலுள்ளோர் உயிரிழத்தல் தொடர்பில் உடனடியாக முழுமையான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் தேவையானளவிற்கு தெளிவுபடுத்தல்களையும் செய்திருக்கின்றோம்.
குறிப்பாக தற்போது தெரிவிக்க வேண்டிய விடயம் யாதெனில் , இந்த விடயம் தொடர்பில் நம்பமான ஆதாரங்கள் இன்றி முன்வைக்கப்படுகின்றன.
எனினும் பொறுப்பு கூற விடயங்கள் தொடர்பில் நம்பத்தகுந்த சாட்சியங்களுடன் தெரிவிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு வெற்றிகரமாக எமது சார்பில் வழங்க வேண்டிய பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருக்கின்றோம். இது தொடர்பில் தொடர்ச்சியாக எமது அவதானம் செலுத்தப்படும்.
வெளிநாட்டலுவல்கள் அமையும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது” என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி.....
இலங்கையில் தமிழர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை