மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்
புதிய இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிலித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் உள்ள ஒரு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் கைதிகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை
முன்னதாக, மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலைமை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்தவும் விசாரணைகளை முன்னெடுக்கவும் பல சிறப்பு பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை திணைக்களத்தின் தகவலின்படி, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று (01) மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பதற்ற நிலைக்கு காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார் மற்றும் STF அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிக்கை
இதேவேளை, கைதிகள் சிறைச்சாலையின் முதன்மை சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம், இன்று பிற்பகல் கைதிகளைச் சந்திக்க வந்திருந்த உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அவர்கள் தற்போது சிறைச்சாலைக்கு வெளியே காத்திருக்கின்றனர். சிறைச்சாலைக்கு வெளியே இருந்த கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவில்லை.
முதலாம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமையை விசாரிக்க பல சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதற்ற நிலை
எனினும், அமைதியின்மைக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நிலைமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.