ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ருவன் மற்றும் அகில?
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) மற்றும் கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் சாகல காரியவசம் (Sagala Kariyawasam) உள்ளிட்டோர் தொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) முறையிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) மற்றும் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) ஆகியோர் முன்வைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வஜிர அபேவர்தன மற்றும் சாகல காரியவசம் உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி நிலை முறைக்கமைய, அந்தந்த பதவிகளுக்கு கட்சி யாப்பின் படி வழங்கப்படும் அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை மீறி செயற்படுவதாகவே முறையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் குறித்த இருவரும் அநாவசியமான ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த இடமளிக்கக்கூடாது என இதன்போது ரணிலிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறு கோரியிருப்பதாகவும், இதற்கு முடிவினை கொண்டு வரும் வரை பணிகளில் இருந்து விலகியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவருக்கு அடுத்த நிலையில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ருவன் விஜேவர்தன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் இந்த தீர்மானமானது ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.