ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ள அடையாளம் தெரியாத நபர்கள்
தமிழ் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அதன் காரணமாக சம்பவத்திற்கு அடுத்த நாள் பாதிக்கப்பட்ட தரப்பினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களை வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த அடையாளம் தெரியாத நபர்கள் தில்லைநாயகத்தின் மனைவி வங்கியில் மேலதிகமான பணத்தினை பெற்று வந்ததாகவும், அதனை மீளத்தருமாறும் கூறியுள்ளதுடன், ஊடகவியலாளரான தில்லைநாயகத்தையும் மிரட்டும் தொனியில் விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனையில் வசித்து வந்த தமிழ் ஊடகவியலாளரான தில்லைநாயகம் இதற்கு முன்னரும் பல தடவைகள் அடையாளம் தெரியாதவர்களினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், கல்முனையில் உள்ள அவரது வீட்டிற்குள் இரவு வேளையில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது ஊடக கருவிகள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருந்ததாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவங்கள் தொடர்பாக இதற்கு முன்னர் கல்முனை பொலிஸ் நிலையத்திலும், கல்முனை மனித உரிமை அலுவலகத்திலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.