முல்லைத்தீவு தண்டுவான் பெரியகுளம் வீதியில் பயணிப்போருக்கு ஏற்படும் அசௌகரியம்
முல்லைத்தீவு தண்டுவான் பெரியகுளம் வீதியின் அபிவிருத்திச் செயற்பாடுகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவ்வீதியைப் பயன்படுத்தி வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தண்டுவானில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட காபைற் வீதியாக மாற்றும் அபிவிருத்திச் செயற்பாடு தவசிகுளம் வான்பாயும் பகுதி வரையே நடைபெற்றுள்ளது.
வீதிகளை புனரமைக்கும் அரசின் திட்டங்கள் பாரட்டப்பட வேண்டியவையாக இருந்த போதும் அவை இடைநடுவில் கைவிடப்படப்படுவதால் மக்களிடையே அதிருப்தி ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
பெரியகுளம் வீதியின் அபிவிருத்தி
தவசிகுளத்தின் வான் பாயும் போது வரும் நீர் பாதையை கடக்கும் பகுதி கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொங்கிறீற்று வீதியோடு பெரியகுளம் வரை எத்தகைய புனரமைப்புப் பணிகளும் உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இரண்டு கிலோமீற்றர் வரையான தூரத்திற்கு காபைற் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்காது விட்டிருப்பதானது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையினையும் பதிவு செய்திருந்தனர்.
அபிவிருத்தியின் ஆரம்பச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு புதிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒதியமலை வீதியுடன் இணையும் இடத்தில் உள்ள மீள் புனரமைக்கப்பட வேண்டிய பாலம் ஒன்றும் புனரமைக்கப்படாது அவ்வாறே இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
நீரோட்டத்தின் இயல்புக்கமைய புதிய பாலங்களையும் அமைக்க வேண்டிய தேவையும் இருப்பதனைச் சுட்டிக்காட்டலாம்.
ஏமாற்றமடையும் மக்கள்
காபைற் வீதியாக இருப்பதால் பயணம் இலகுவாக இருக்கும் என்று இந்த பாதையின் வழியே பயணத்தை தொடர்ந்த தமக்கு பாதையின் முக்கால்வாசி பகுதியை கடந்ததும் கடினமானதாக இருந்தது என அவ்வீதியை பயன்படுத்திய தன் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருந்தார் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர்.
இதே நிலைதான் உள்ளூர் மக்களுக்கும் ஏற்படுவதாக பெரியகுளம் மற்றும் பழம்பாசியைச் சேர்ந்த மக்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தவசிகுளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் இந்த வீதியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒதியமலை பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியை ஒருவரிடம் இது தொடர்பில் கேட்டபோது "நித்தமும் போய் வரும்போது போது செப்பனிடாத மீதமுள்ள பாதையின் அமைவினால் பயணத்தில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக" குறிப்பிட்டார்.
"ஆருட்ட சொல்லி என்ன பிரயோசனம்?" என்ற சொல்லாடலை அவர் தன் இயலாமையின் வெளிப்பாடாக எதிர்கொள்ளும் கடினத்தை பகிர்ந்திருந்ததும் நோக்கத்தக்கது.
ஒதியமலை மக்கள்
ஒதியமலையில் இருந்து இடம்பெயர்ந்து தண்ணீரூற்று, முள்ளியவளை, கரடிப்பிலவு, மாங்குளம், ஒட்டிசுட்டான் என பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பிய போதும் இடம்பெயர்ந்து வாழ்ந்த தங்கள் இடங்களுடன் தொடர்புகளை பேணிய வண்ணமே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் இந்த வீதியின் புனரமைப்பை முழுமைப்படுத்தல் ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என்பதும் ஒதியமலைவாழ் மக்களின் கருத்துக்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த போக்குவரத்து வசதி இருக்குமானால் கிராம மக்களது பொருளாதார மேம்பாடு மெல்ல மெல்ல வளர்ச்சி நோக்கியதாக நகர்ந்து செல்லும் என அப்பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் ஒன்றாகவும் ஈழப்போராட்ட காரணங்களில் ஒன்றான நில ஆக்கிரமிப்பின் வலியை சுமந்த மண்ணாகவும் ஒதியமலை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் அள்ளுண்ட கொங்கிறீற்று வீதியின் பகுதி
தவசிகுளத்திலிருந்து வான் பாயும் தண்ணீர் பாய்ந்து செல்லும் வழித்தடத்தினை குறுக்கறுத்து செல்லும் பெரியகுளம் தண்டுவான் பாதையின் பகுதி கொங்கிறீற்று பாதையாக அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு இருபக்கங்களிலும் அடைக்கப்பட்டிருந்த கட்டமைப்பில் நீரோட்டத்திசையில் இருந்த அணைப்பு அள்ளுண்டு பாதை பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்வன திருந்தச் செய் என்பதைக் கருத்திலெடுத்து செயற்பட வேண்டும் என இது தொடர்பில் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
