வவுனியாவில் அனுமதியற்ற கட்டடத்திற்கு தண்டப்பண விலக்களிப்பு: மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டு
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அனுமதியற்ற கட்டடம் ஒன்றிற்கு 49 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை செலுத்த தேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபை விலக்களிப்பு வழங்கியதாக வவுனியா மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று(11.09) இடம்பெற்ற போதே சபையில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர்,
“அந்த பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட கட்டடம் தொடர்பாக 49 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. எனினும் அந்த தொகையை செலுத்ததேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபையால் அந்த காலப்பகுதியில் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கருத்து
எந்த அடிப்படையில் அது வழங்கப்பட்டது என கூறுமாறு மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே இது தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் சபை தீர்மானம் ஒன்றை எடுத்து இதனை ஆராய்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தீர்மானம் தேவையில்லை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விளக்கம் ஒன்றை கோரி சபை முதல்வரே அடுத்தகட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என உறுப்பினர்களான முகமட் முனவ்வர் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோர் கூறினர்.
கட்டண விலக்களிப்பு
உரிய நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சென்றால் நாமும் போகமுடியாது. எனவே முழுச்சபையும் இதற்கு பொறுப்பல்ல என்று உறுப்பினர் முனவ்வர் இதன்போது தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வருக்கும் குறித்த இரு உறுப்பினர்களும் இடையில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இந்தநிலையில், சபைத் தீர்மானமாக இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த கட்டண விலக்களிப்பு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விளக்கம் கோருவதற்கு முதல்வருக்கு சபை உறுப்பினர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




