பொதுமக்கள் மீது அதீத பலப்பிரயோகமா..! விசாரணையை கோரும் ஐக்கிய நாடுகளும், அமெரிக்காவும்!
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா
அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இடையிலான முறுகலின்போது, அதீத பலாத்காரப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுள்ளன.
இதன்பொது பெட்ரோல் கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் பல மணிநேரங்களைச் செலவிடும் குடிமக்களின் விரக்தியைப் புரிந்துகொள்ளுமாறு பாதுகாப்புச் சேவையினரை தாம் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
விசாரணை வேண்டும்
இந்தநிலையில் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தினால் அது குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க தூதர் ஜூலி சுங், தமது ட்வீட்டில், இந்த கடினமான சூழ்நிலையில் அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் வரிசைகள் மற்றும் மின்வெட்டுகள் அதிகரிக்கும் போது, இயற்கையாகவே பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இதன்போது அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யாது அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தினால், அது தொடர்பில் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்.
அத்துடன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிகாரிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்க தூதர் ட்வீட் செய்துள்ளார்.