சீனா தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அதிருப்தி! - ஆதரவளிக்கும் இலங்கை
சீனா, சிறுபான்மை உய்குர் முஸ்லிம் சமூகத்தை துன்புறுத்தியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் ஷின்ஜியாங் பிரச்சனையில் இலங்கை, சீனாவுக்கு ஆதரவாக கருத்துரைத்துள்ளது.
உய்குர் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான மீறல்கள் குறித்த அறிக்கைகளை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைத் ஆணையாளர் மிச்செல் பச்சலெட், இந்த ஆண்டு சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதன்போது, ஷின்ஜியாங் பகுதி உட்பட, இடங்களுக்கு செல்வதற்கான நிபந்தனைகளை சீனா ஏற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்திற்கு ஒரு அர்த்தமுள்ள அணுகுமுறை அவசியம் என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வு ஒன்றில் உரையாற்றிய பச்லெட் கடந்த திங்களன்று கூறினார்.
எனினும் நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான மரியாதை சர்வதேச உறவுகளின் ஒரு பகுதியாகும் என்று இலங்கை கூறியுள்ளது.
இந்த சூழலில், ஹொங்கொங், ஷின்ஜியாங் மற்றும் திபெத் தொடர்பான விடயங்கள் சீனாவின் உள் விவகாரங்களாகும். எனவே அதில் வெளிகட்சிகள் தலையிடக்கூடாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துதல், சமூக ஸ்திரத்தன்மையை பேணுதல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் அபிவிருத்தி உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சீனாவின் முயற்சிகளை பாராட்டுவதாகவும் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை உய்குர் பிரதேசம், முகாம்களில் கைதிகளின் தன்னிச்சையான
தடுப்புக்காவல், கட்டாய உழைப்பு, சித்திரவதை, கட்டாய கருத்தடை உள்ளிட்ட மனித
உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகளின் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.