உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் அமெரிக்காவின் மியாமியில் சந்திப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் அடுத்த வாரம் அமெரிக்காவின் மியாமியில் சந்தித்துப் பேச அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக செலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்
எனினும் ரஷ்யாவின் கருத்து இன்னும் வெளியாகவில்லை. இந்த சந்திப்பு நடந்தால், அது, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க மண்ணில் நடைபெறும் முதல் நேரடிப் பேச்சுவார்த்தையாக அமையும்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் (Midterm Elections) காரணமாக, அதற்கு முன்னதாகவே (ஜூன் மாதத்திற்குள்) ஒரு தீர்வை எட்ட டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விரும்புவதாக செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில்,சமீபத்தில் அபுதாபியில் நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
நிலப்பரப்புகளை விட்டுக்கொடுப்பது போன்ற கடினமான முடிவுகளில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், இரு நாடுகளும் போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொண்டன.
இதேவேளை,ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், ரஷ்யா உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடும் குளிரிலும் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.