மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் படைகள் களத்தில்....
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள முக்கியக் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்க உக்ரைன் தனது சிறப்பு இராணுவப் பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது.
உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவையின் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov), இந்தப் பிராந்தியத்திற்குப் பயணம் மேற்கொண்ட பிறகு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனுக்குத் தேவையான நிதி
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு எதிராக ஈரானிய தயாரிப்பான 'ஷாஹெத்' (Shahed) ட்ரோன்களை எதிர்கொண்டு உக்ரைன் பெற்றுள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி, இந்த நாடுகளுக்குத் தொழில்நுட்ப மற்றும் கள உதவிகளை வழங்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.
இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட உக்ரைனிய பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதில் உக்ரைன் சுமார் 90 சதவீத வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் 'பேட்ரியாட்' (Patriot) போன்ற விலை உயர்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி மலிவான ட்ரோன்களைச் சுடுவதற்குப் பதிலாக, குறைந்த செலவில் ட்ரோன்களை அழிக்கும் உக்ரைனின் நவீன உத்திகளை மத்திய கிழக்கு நாடுகள் பெரிதும் வரவேற்றுள்ளன.
குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் உக்ரைனிடமிருந்து 'இடைமறிப்பு ட்ரோன்களை' (Interceptor drones) வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த இராணுவ ஒத்துழைப்பு உக்ரைனுக்குத் தேவையான நிதி மற்றும் ஏராஜதந்திர ஆதரவை வழங்குவதுடன், ஈரான் மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டணியை சர்வதேச அளவில் எதிர்கொள்ளவும் உதவும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.