கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்! இலங்கை பெண், பொலிஸார் மீது தாக்குதல்
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பிரதேசத்தில் பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதலை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரையும் அந்தப் பெண் தாக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 37 வயதுடைய உக்ரைன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 18 வருடங்களாக குறித்த பெண் திருமண விசா அடிப்படையில் இரத்மலானை பிரதேசத்தில் வசித்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்
சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இதன்போது அந்த வெளிநாட்டுப் பெண், கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
கடமைக்கு இடையூறு
தாக்குதல் நடத்தியமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உக்ரைன் பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.