சீனாவை உலுக்கிய பாவி சூறாவளி: 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்
இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான 'பாவி' சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச் சூறையாடியுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் மற்றும் வென்சூ நகரங்களுக்கு இடையே இந்த சூறாவளி கரையைக் கடந்தது.
பாவி சூறாவளி
இதன் காரணமாகப் பலத்த காற்றும், பெருமழையும் கொட்டித் தீர்த்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில் தொழில்நுட்ப மையமாகத் திகழும் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து மட்டும் 22 இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சூறாவளி கரையைக் கடந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அது ஓரளவுக்கு வலுவிழந்த போதிலும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைக் கொண்ட இந்த மாபெரும் புயல் சின்னம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு சீனாவில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயலின் தாக்கத்தால் வென்சூ நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சீனாவின் போக்குவரத்து
அதிர்ஷ்டவசமாக சீனாவில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், அண்டை தீவான தாய்வானைக் கடந்தபோது அங்கு பலத்த காற்றினால் 134 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த இயற்கைச் சீற்றத்தால் சீனாவின் போக்குவரத்து நெட்வொர்க் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஷங்காய் மற்றும் ஹாங்சோ நகரங்களில் 2,300க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகளும், சுமார் 1,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு சீனா அதிகளவிலான தீவிர வானிலைச் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது அன்ஹுய் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ள புயல் காரணமாக, ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜிலின், லியோனிங், ஹெபெய் மற்றும் ஷான்டாங் மாகாணங்களுக்குப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.