வான் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது
கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்குச் சென்று கொண்டிருந்த வானொன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், இந்த சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி வானின் சாரதியான கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனும் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வானை கிண்ணியா, கண்டலடியூற்று இராணுவமுகாம் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனையிட்ட போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் ஒரு பைக்கற்றும் 1கிராம் கொண்ட மற்றுமொரு பைக்கற்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கர்ப்பத் தடை மாத்திரைகள் 5 ஐ கொண்ட 130 கார்ட்டுகளும், வெளிநாட்டு சிகரெட் பைக்கற்றும் 5 உம் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வானில் போதைப்பொருட்களுடன் வந்த நபரொருவர் கிண்ணியாவில் இறங்கியுள்ளார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.