அடையாளம் காணப்பட்ட அளவு போல் இரண்டு, மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்கலாம் - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தி சுமார் 2 ஆயிரத்து 300 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் கூறினாலும் அந்த எண்ணிக்கையை விட இரண்டு, மூன்று மடங்கு தொற்றாளர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது சமூகத்திற்குள் இருக்கலாம் எனத் தான் எண்ணுவதாக கோவிட் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை 44 ஆயிரம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 25 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி 2 ஆயிரத்து 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போது, அதனை விட இரண்டு, மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
நாங்கள் சைனோபார்ம் தடுப்பூசியை 6 லட்சம் பேருக்கு வழங்கியுள்ளோம்.
அந்த தடுப்பூசி முடிந்த பின்னர், அடுத்த தொகை வரும் வரை தடுப்பூசி வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியேற்படும்.
கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் அதிகரிப்பதற்குச் சுகாதார அமைச்சின் தவறுகளே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அப்படியான பலவீனம் இருக்கின்றதா?.என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,
நானும் அந்த அமைச்சிலேயே இருக்கின்றேன். இதனால், அது பற்றி நான் எதனையும் கூறாமல் விட்டு விடுகிறேன். ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அது பற்றிப் பேசுவது நாகரீகமல்ல எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.