புத்தளம் பகுதியில் பெட்ரோல் கடத்த முற்பட்ட இருவர் கைது (Photos)
அனுமதி பத்திரமின்றி பெட்ரோலைக் கடத்த முற்பட்ட இருவர் தம்பபண்ணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் - சிலாபத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு 1429 லீட்டர் பெட்ரோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட போதே தம்பபண்ணி உடப்பு கடற்படையினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் சோதனை நடவடிக்கை
சிலாபத்திலிருந்து மதுரங்குளி தழுவ உள்வீதியினூடாக கற்பிட்டிக்கு பெட்ரோல் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக கடற்படைப் பிரிவினருக்குக் இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய கடற்படைப் பிரிவினர், தழுவ கடற்படை முகாமிற்கு முன்னாலுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த லொறியை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
இதன்போது 1429 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றபட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
பெட்ரோல் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவை மேலதிக நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் புத்தளம்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.