பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சென்ற இருவர் மாயம்
பொத்துவில் பிரதேசத்தில் இயந்திர படகில் கடற்தொழிலுக்காக சென்ற இருவர் கரைக்குத் திருப்பாமல் காணாமல்போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் - பாக்கியவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமட் நௌவ்பர் மற்றும் 40 வயதுடைய முகமது தாஹீர் என்ற இருவரும் வழமை போல் சம்பவதினமான நேற்று அதிகாலை வீட்டிலிருந்து கடற்தொழிலில் ஈடுபட சென்றுள்ளனர்.
காணாமல்போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு
பொத்துவில் கடற்கரையிலிருந்து இயந்திர படகில் கடற்தொழிலில் ஈடுபட சென்ற இவர்கள் தொழில் முடித்து கொண்டு அன்றைய தினம் மாலையில் கரைக்குத் திரும்ப வேண்டியபோதும் இன்று பகல் வரையில் கரைக்குத் திரும்பாமல் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் இவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.